ஊரடங்கு விதிகளை மீறிய சிஆர்பிஎப் கமாண்டோ வீரருக்கே இந்த கதியா..?


ஊரடங்கு விதிகளை மீறிய சி.ஆர்.பி.எப். வீரரை சங்கிலியால் கட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர், போலீசார். இந்த புகைப்படம் வெளியாகி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெலகாவி நகரை சேர்ந்தவர் சச்சின் சாவந்த். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருகிறார். மாவோயிஸ்டுகள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சச்சின் கொரில்லா போர் முறையில் திறன் பெற்றவர்.

தற்போது விடுமுறையில் இருந்த இவர், சீருடையின்றி வழக்கம்போல் அணியும் ஆடைகளுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் முகக் கவசம் அணியவில்லை. முக கவசம் அணியாமல் வெளியே சென்றார் என்பதற்காக சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது.

இதுபற்றி சி.ஆர்.பி.எப். தலைமை சார்பில், கர்நாடக தலைமை காவல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எங்களது வீரரை அடித்தும், கைகளை கட்டி போட்டும், வெறுங்கால்களுடன் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றும், சங்கிலிகளால் பிணைத்தும் மற்றும் தரையில் உட்கார வைத்தும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போலீசார் இதனை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

போலீசாருக்கு எதிராக எப்.ஐ.ஆர். ஒன்றை புகாராக அளிக்கவும் சி.ஆர்.பி.எப். தலைமை பரிசீலனை செய்து வருகிறதாம். எனினும், முக கவசம் அணியாதது பற்றி கேட்ட கான்ஸ்டபிள்கள் இருவரையும், சி.ஆர்.பி.எப். வீரர் அடித்து, உதைத்ததாகவும் எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, கர்நாடக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!