இது புதுசு… சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பட்ட திருமணம்…!


கோவையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை எளிய முறையில் செய்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பினர்.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசு அறிவுறுத்தலின் பேரில், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். மேலும் நிகழ்ச்சியை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை எளிமையாகவும் நடத்தி வருகின்றனர். சிலர் நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த என்ஜினீயர் விக்னேஷ் பாபு மற்றும் பிரவினா ஆகியோர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் நேற்று காலை விநாயகர் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் திருமண நிகழ்ச்சிகளை உறவினர்கள் பார்க்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினர். இதனை அவர்கள் வீட்டு இருந்தபடியே பார்த்தனர்.

இதுகுறித்து மனமகன் விக்னேஷ் பாபு கூறுகையில், எனக்கும், கோவை டைடில் பார்க்கில் பணியாற்றி வரும் பிரவீனா என்பவருக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். இதற்காக மண்டபத்தை முன்பதிவு செய்து, சுமார் 2,500 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், திருமணத்தை விமரிசையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் திருமணத்தை திட்டமிட்டபடி அதே நாளில் நடத்த முடிவு செய்தோம். தொடர்ந்து பெற்றோர் முன்னிலையில் கோவில் எளிமையான திருமணத்தை நடத்தினோம். நண்பர்கள், உறவினர்கள் பலரும் கலந்துகொள்ள முடியாததால் அவர்களுக்காக, திருமண நிகழ்ச்சியை சமூக வளைத்தளத்தில் ஒளிபரப்பினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!