ரஜினியா.. விஜய்யா..? ரசிகர்களிடையே மோதல்.. ஒருவர் அடித்து கொலை!


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கொரோனா நிவாரண நிதி அதிகம் கொடுத்தது ரஜினியா? விஜயா? என ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ். கூலி தொழிலாளியான இவர் நடிகர் விஜய்யின் ரசிகர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் தினேஷ்பாபு. இவர் ரஜினி ரசிகர் ஆவார்.

நண்பர்களான இருவரும், ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் மது அருந்தும் பழக்கம் உள்ள இருவரும், ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது போதையில் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது, ரஜினியா? விஜய்யா? என்று அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் தரையில் கிடந்த கல்லில் யுவராஜின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், மரக்காணம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யுவராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த, மரக்காணம் காவல்நிலைய போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளி தினேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு மக்கள் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், இளைஞர்கள் பலர், தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வரும் வேளையில், கொரோனா நிவாரணம் அதிகம் வழங்கியது ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதத்தில் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டது வேதனைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!