கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவி – அமெரிக்க டாக்டர் எச்சரிக்கை


செயற்கை சுவாச கருவிகளே கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவிகளாய் மாறியிருக்கலாம் அமெரிக்க டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஹைதியும் ஒன்று.1.1 கோடி மக்கள் தொகையை கொண்ட ஹைதியில் கொரோனா வைரஸ் பரவினால் பேராபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

செயற்கை சுவாச கருவிகள்

உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிலவரம் வேறு விதமாக இருக்கிறது. காஸாவில் 20 லட்சம் பேருக்கு 20 செயற்கை சுவாச கருவிகள் தான் இருக்கின்றன. 50 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் மூன்றே மூன்று வென்டிலேட்டர்கள்தான் இருக்கின்றன. பர்கினோ ஃபாஸோ நாட்டின் 2 கோடி குடிமக்களுக்கும் இருப்பது 12 தீவிர சிகிச்சைப் படுக்கைகள்தான்.

1.1 கோடி மக்கள் தொகையை கொண்ட ஹைதியில் 60 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள மருத்துவமனைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயேதீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கே அது தேவைப்படுகிறது. இந்த 20 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படும். இவர்களில் கால் சதவீதம் பேருக்கு வென்டிலேட்டர்கள் அவசியம். இந்த சிகிச்சைகள் கிடைக்காதவர்களுக்கு மூச்சுத்திணறலால் மரணம் ஏற்படுவது தவிர்க்கவே முடியாதது.

ஆபத்தாகும் செயற்கை சுவாச கருவிகள்

செயற்கை சுவாச கருவிகளுக்காக நாடுகள் பதறித் தவித்த நிலை மாறி, செயற்கை சுவாச கருவிகளே கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவிகளாய் மாறியிருக்கலாம் என சந்தேகம் எழுப்புகிறார் நியூயார்க் மருத்துவர் ஒருவர்.

உலகமெங்கும் உள்ள பல மருத்துவர்கள் அவரது கருத்தை ஆதரிக்கிறார்கள். இங்கிலாந்து ஆய்வு ஒன்றில் செயற்கை சுவாச கருவிகளுடன் இணைக்கப்பட்ட 98 கொரோனா நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் உயிரிழந்துவிட்டது கண்டறியப்பட்டுள்ளது.

நியூயார்க்கில், சுவாச கருவிகளில் இணைக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் குணமடையவில்லை.மற்ற நாடுகளிலும் சுவாசகருவிகள் இணைக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு வீதம் அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

டாக்டர்கள் குற்றச்சாட்டு

இந்நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த இளம் மருத்துவரான கேமரூன் கைல்-சிடெல் யூடியூப் வீடியோ ஒன்றில் சுவாச கருவிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளிகள் தன் கண் முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்டு தவித்துப்போயிருக்கும் கேமரூன் எந்த சுவாச கருவிகள் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் என நம்பப்படுகிறதோ, அதே வெண்டிலேட்டர்களே அவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று நம்புகிறார்.

செயற்கை சுவாச கருவிகள் நிமோனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுபவை.நிமோனியா நோயாளிகளுக்கு முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதன் பிறகு கருவி ஒன்றின் உதவியுடன் ஒரு குழாய் அவர்களது சுவாசப்பாதைக்குள் செலுத்தப்படும். அதன்பின், அந்த குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படும்.

சுவாச கருவிகள் வேலை

சுவாசிக்க முடியாமல் சோர்ந்திருக்கும் நோயாளியின் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட, அவரது உடலுக்குள் ஆக்சிஜன் செல்லும்.ஆனால், கொரோனா நோயாளிகளுக்கும் நிமோனியா நோயாளிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. கொரோனா நோயாளிகளால் சுவாசிக்க முடியும். நிமோனியா நோயாளிகளால் சுவாசிக்க முடியாது, ஆகவே அவர்களது நுரையீரலின் வேலையை செயற்கை சுவாச கருவிகள் செய்யும்.

நிமோனியா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதில்லை, அவர்கள் சுவாச செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள்.அதே நேரத்தில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் வருவதில்லை.அவர்கள், மலையேறும் போது அதிக உயரத்திற்கு செல்பவர்கள் போலவும், விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுபவர்கள் போலவும்தான் கொண்டுவரப்படுகிறார்கள்.

தவறாக பயன்படுத்துதல்

அவர்களுக்கு தேவை ஆக்சிஜன் தானேயொழிய, செயற்கை சுவாச கருவிகள் அல்ல என்கிறார் கேமரூன். ஜெர்மனி மருத்துவர் டாக்டர் லூசியானோ கட்டினோனி உட்பட பலரும் கேமரூனின் கருத்தை ஆதரிக்கிறார்கள்.சொல்லப்போனால், இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சாதாரணமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டுதான் அவர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததாம்.

சில மருத்துவர்கள், நோயாளியை இடது புறம் அல்லது வலது புறம் சாய்வாக படுக்க வைத்திருக்கிறார்கள், இது சுவாச கருவிகள் மூலம் நுரையீரலுக்குள் ஆக்சிஜனை செலுத்தாமல், ஆக்சிஜன் மாஸ்க் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டாலே போதுமான அளவு ஆக்சிஜனை நோயாளியின் இரத்தத்தில் அதிகரிக்க உதவும் என்கிறார்கள்.ஆக, வெண்டிலேட்டர்கள் நிமோனியா நோயாளிக்கு வேண்டுமானால் நன்மை செய்யலாம், ஆனால் கொரோனா நோயாளிக்கு அது நன்மையை விட தீமைதான் அதிகம் செய்யும் என்கிறார் கேமரூன்.

இதுபோல் சீனாவிலும் செயற்கை சுவாச கருவிகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி பலர் உயிர் இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

செயற்கை சுவாச கருவி செயல்படும் விதம்

நோயாளிக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுவதற்கு முன்பாக சுகாதாரப் பணியாளா்கள் அந்நபரை மயக்கமடையச் செய்கின்றனா். அதன் பிறகு அந்நபரின் மூக்கிலும் வாயிலும் சிறிய குழாய்களைப் பொருத்தி அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்து விடுகின்றனா்.

1-செயற்கை சுவாசக் கருவியின் திரை நோயாளிக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படும் அளவையும், அவரின் உடலிலிருந்து வெளியேறும் காபன் டை ஆக்ஸைட் அளவையும் காட்டுகிறது. நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஏற்ப அந்த அளவுகளை மருத்துவா்கள் மாற்றுகின்றனா்.

2- இந்தக் கருவியின் மூலம் நோயாளிக்கு அளிக்கப்படும் காற்றுக்கு ஈரப்பதம் வழங்கப்படுகிறது.

3- நோயாளியின் மூக்கிலும் வாயிலும் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மூலம் காற்று நுரையீரலுக்குச் செல்கிறது.

4- நோயாளியின் உடலில் உற்பத்தியாகும் காா்பன் டை ஆக்ஸைட் செயற்கை சுவாசக் கருவி மூலம் வெளியேற்றப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!