பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்… மோட்டார் சைக்கிளில் வந்த என்ஜினீயர் உருக்கம்..!


தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,200 கி.மீட்டரை கடந்து மோட்டார் சைக்கிளில் குமரிக்கு வந்த என்ஜினீயர், 4 நாட்கள் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலப்பன். இவரது மகன் ஜெயபிரகாஷ்(வயது 24). என்ஜினீயரான இவர் ஒரு வருட பணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சேர்ந்தார். ஏப்ரல் மாதம் இந்த பணி முடிவடைவதாக இருந்தது.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அவர் பரிதவித்தார். பணம் இருந்தாலும், உணவுக்காக அவர் சிரமப்பட்டார். கடைசியாக 4 நாட்கள் தொடர்ந்து பசி, பட்டினியுடன் இருந்துள்ளார். கிடைத்த பிஸ்கெட், தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் வாழும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஊரடங்கு முடிவடைந்ததும், சொந்த ஊருக்கு செல்லலாம் என்ற மனநிலையில் இருந்தபோது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் நொந்து போனார். அதே சமயத்தில், எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என முடிவெடுத்த ஜெயபிரகாஷ் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார். மேலும், அங்குள்ள அதிகாரிகள் மூலம் அனுமதி சீட்டையும் முறைப்படி பெற்றார்.

பின்னர் 16-ந் தேதி புறப்பட்ட ஜெயபிரகாஷ் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கினர். அங்கு அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு உடல்நிலை சீராக இருந்தது தெரியவந்தது.

இருந்தபோதிலும், 14 நாட்கள் வீட்டில் தனிமையாக இருக்கும்படி ஜெயபிரகாசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 1,200 கி.மீ. மோட்டார் சைக்கிளில் துணிகர பயணத்தை மேற்கொண்டு சொந்த ஊருக்கு என்ஜினீயர் திரும்பிய சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

இதேபோல் காஞ்சீபுரத்தில் இருந்து குமாரபுரம் முட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆசீர் ஜெகதீஸ் தேவமணி (29) என்பவர் லாரி மூலம் சொந்த ஊருக்குச் சென்றார்.

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் இவர் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!