கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட நூதன அறிவிப்பை வெளியிட்ட டைட்டானிக் ஹீரோ


கொரோனா பாதிப்புக்கு உதவ நிதி கொடுத்தால் தன்னுடன் நடிக்கலாம் என பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோ நூதன அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் முழு வீச்சில் பரவி, லட்சத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து வருகிறது. இதில் ஹாலிவுட் நடிகர்-நடிகைகளும் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் இந்த நோய் தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உதவ, உலகம் முழுவதும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றன. நலிந்தோருக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களும் வழங்கப்படுகின்றன. பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோவும் கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட நூதன அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கும் ‘கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்’ என்ற படத்தில் நானும், ராபர்ட் டி நிரோவும் இணைந்து நடிக்க இருக்கிறோம். கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தர இருக்கிறோம். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் எங்களோடு இருக்கலாம். படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு டிகாப்ரியோ கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!