சினிமாவில் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளுக்கு தடை?


கொரோனா அச்சத்தால் சினிமாவில் முத்த காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கொரோனா உயிர்ப்பலிகளில் இருந்து மீள முடியாமல் உலகம் திக்குமுக்காடி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த வைரஸ் தும்மல் மற்றும் மூச்சுகாற்றால் பரவும் என்றும், இதில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர்.

இதனால் ஊரடங்கு முடிந்ததும் திரைப்படங்களில் நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த காட்சிகளை படமாக்குவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

தற்போதையை படங்களில் காதல் காட்சிகளில் எல்லை மீறிய நெருக்கத்தை வைக்கின்றனர். உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளும் சகஜமாகி விட்டன. கொரோனாவால் பாதியில் நின்றுபோன பல படங்களில் நெருக்கமான காதல் மற்றும் முத்த காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இனிமேல் இந்த காட்சிகளில் நடிக்க நடிகர்-நடிகைகள் உடன்படுவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து பிரபல இந்தி இயக்குனர் ஷுஜித் சிர்கார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, “இந்த கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு திரைப்படங்களில் திட்டமிட்டபடி நெருக்கமான காதல் காட்சிகள், முத்த காட்சிகள், கட்டியணைக்கும் காட்சிகளை எப்படி படமாக்க போகிறோம்? என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

நடிகை தியா மிர்சா கூறும்போது, “படப்பிடிப்புகளில் எல்லா பணிகளுமே நெருக்கமாகத்தான் நடக்கும். ஒரு காட்சியை படமாக்கும்போது இணைந்தே இருப்பார்கள். கொரோனாவால் முக கவசம், கையுறைகள் அணிந்துதான் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் நிலை வருமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!