ஊரடங்கில் குடிமகன்களுக்கு மதுபானம் சப்ளை… சிறையில் கம்பி எண்ணும் நபர்..!


குடிமகன்களுக்கு மதுபானம் கொடுப்பது போன்று வீடியோ எடுத்து அதற்கு அதிக லைக்குகள் பெற வேண்டும் என எண்ணி சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தமிழகம், தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மதுக்கடைக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சம்பாபேட் பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய நபர் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் தனது பகுதியில் திண்டாடி வந்த மதுப்பிரியர்களுக்கு மது இலவசமாக வழங்கினார்.

மது பிரியர்களுக்கு தான் மது வழங்குவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோவுக்கு அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என எண்ணிய அந்த நபர் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மது பிரியர்களுக்கு மது வழங்குவது போன்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ போலீசாரின் கண்ணிலும் சிக்கியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக மது பிரியர்களுக்கு மது வழங்கிய அந்த நபரை கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!