கொரனோவால் சோமாலிய நீதி மந்திரிக்கு நடந்த பரிதாபம்…!


சோமாலியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மாகாண நீதி மந்திரி உயிரிழந்தார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 18 லட்சத்து 51 ஆயிரத்து 264 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் ஐரோப்பியா, அமெரிக்காவை தொடர்ந்து தற்போது ஆப்ரிக்க நாடுகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் இதுவரை 21 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டின் ஹீர்ஷபெலி மாகாணத்தின் நீதி மந்திரியாக செயல்பட்டு வந்தவர் ஹலீப் மம்மின் டூஹவ் (58). இவர் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து சென்று சொந்த நாடு திரும்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த டூஹவ் ஜோஹர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் டூஹவ்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாகாண நீதி மந்திரி டூஹவ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சோமாலியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!