விசுவாசிகளின் உடல்களில் கொரோனாவால் உயிர்வாழ முடியாது – தான்சானியா அதிபரால் சர்ச்சை..!


கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தி வரும் நிலையில், தான்சானியாவில் அதற்கு நேர்மாறாக கூட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதால், இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு உலகமே ஊரடங்கு உத்தரவு என்ற பாதையில் செல்லும் நிலையில், தான்சானியா அதிபர் வித்தியாசமான பாதையை பின்பற்றுவதாகவும், நாட்டில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு பதிலாக வழிபாட்டுத் தலங்களில் கூடி பிரார்த்த செய்யும்படி வலியுறுத்தியிருப்பதாகவும் வால்ஸ்ட்ரீட் ஜோர்னலில் செய்தி வெளியாகியிருக்கிறது. கடவுளால் மட்டுமே இந்த வைரசை தணிக்க முடியும் என அதிபர் கூறியிருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களாக தான்சானியா அதிபர் ஜான் மகுபலி, தேவாலய சேவைகளில் பங்கேற்று, கொரோனா வைரஸ் விசுவாசிகளின் உடல்களில் உயிர்வாழ முடியாது என்று உற்சாகமாக பேசியுள்ளார். அவரது அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் அதிக அளவிலான மக்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

தான்சானியால் மார்ச் 16ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் ஒருவருக்கு கண்டறியப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மாதத்திற்கு (ஏப்ரல் 30 வரை) அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

தான்சானியாவில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!