மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்


நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 413 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவை திணறடித்த கொரோனா தற்போது அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.


இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நரேந்திர மோடி, டொனால்டு டிரம்ப் மற்றும் மனிலா டிரம்ப்

ஆனால், உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் அவ்வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்தது.

இதனால் டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,” நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.

ஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம்’’ என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!