காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணையும் விட்டு வைக்காத கொரோனா – அமேசான் காட்டில் பரபரப்பு


பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 10 லட்சத்து 14 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 52 ஆயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 8 ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்.

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது அமேசான் காடுகளில் வாழும் மக்களிடமும் பரவத்தொடங்கியுள்ளது.

அமேசானின் கொகமா பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.

அப்பெண் சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வருகிறார். அமேசானில் வாழும் பழங்குடியினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது காடுகளில் வாழும் மற்றவர்களுக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.

இதற்கிடையே வைரஸ் உறுதி செய்யப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அமேசானில் கொரோனா வைரஸ் பரவியது இதுவே முதல் முறையாகும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!