வீட்டில் மனைவியிடம் சும்மாதானே இருக்க என கேட்கும் ஆண்கள் மட்டும் இத படிக்கவும்..!


குடும்பத்தை தாங்கிச் செல்லக்கூடிய ஓர் பிம்பம் அப்பா என்றால் அதனை கட்டுக்கோப்பாக வழி நடத்துவது அம்மாவாகத்தான் இருக்க முடியும். குடும்பம் என்ற அமைப்பு உருவானதே இதை வைத்துத் தானே ஒருவர் பொருள் ஈட்டுவார் இன்னொருவர் குடும்ப உறுப்பினர்களையும் குடும்பத்தையும் நிர்வகிப்பார். இந்த நிர்வாகம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பது அம்மாக்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.

அதிலும் பொருளாதார ரீதியாகவும் துணை நிற்கக்கூடிய அம்மாக்கள் என்றால் அவர்களது பணிச்சுமை இரட்டிப்பாகும். ஒரே நேரத்தில் வீடு அலுவலகம் இரண்டையும் பேலன்ஸ் செய்வது அவர்களது வேலையாக இருக்கும்.

அம்மாக்களுடைய இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று எட்ட நின்று பார்ப்பதில் யாருக்குமே அதன் முழுவீரியம் தெரியப்போவதில்லை அதற்காகவே சில அம்மாக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்… பகிர்ந்த விஷயங்கள் நிச்சயம் உங்களை சிந்திக்க வைக்கும். உங்களை யோசிக்க வைக்கும்.

குடும்பம் என்ற அமைப்பே அம்மாவைக் கொண்டு தான் நிலைத்து நிற்கிறது என்று சொல்வேன். நிச்சயமாக, இதை யாருமே மறுக்க முடியாது. வெளியில் சென்று களைப்பாக திரும்பும் போது அவர்களை வரவேற்க ஓர் வீடும், பார்த்து பார்த்து தேவைகளை செய்ய அம்மாவும் இருக்கிறார் என்பது தான் வீடு என்ற உணர்வைத் தருகிறது.

வெளியில் சென்று விட்டு அல்லது பள்ளி சென்று வீடு வரும் குழந்தைகள் முதலில் தேடுவது அம்மாவைத் தான். அம்மாவிடம் தான் அவர்கள் மிகவும் அன்னியோன்னியமாக பேச நினைக்கிறார்கள்.


தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.

இது நான் மட்டுமல்ல பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பேச்சு இது. நான் வெளிய போய் சம்பாதிக்கிறேன்… நீ வீட்ல சும்மாதான உக்காந்திருக்க என்ற கேள்வியை எதிர்கொள்ளாத தாய்மார்கள் யாருமே இல்லையென்றே சொல்லலாம்.

என்னதான் பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரியப்போவதில்லை என்று பல பெண்கள் என்னென்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து இது தான் என் கடமை… நான் தாயல்லவா… நான் மனைவியல்லவா எனக்கு பொறுப்புகள் அதிகம். இவையெல்லாம் நான் தான் செய்ய வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

சரி…. எங்களுக்காகவாவது அம்மாக்கள் வீட்டில் என்ன செய்வீர்கள். 24 மணி நேரத்தை பிரித்து பட்டியலிடுங்கள் என்று கேட்டோம். அவர்கள் பெரும்பாலோனோர் சொன்னது இந்த பதில் தான். இவை உங்களில் சிலருக்கும் பொருந்தலாம்.

காலைல ஐஞ்சு மணிக்கு எந்திரிப்போம். வாசத்தெளிச்சு கோலம் போட்டுருவேன். பால் கொதிக்க வச்சு டீ போடணும். குழந்தைங்க குளிக்க வெந்நீ… போட்டு வைக்கணும். அப்பறம் காலைல சாப்ட இட்லி ஊத்திட்டு சட்னிக்கு வெங்காய்ம் தக்காளி நறுக்கி வச்சிட்டு புள்ளைங்கள எழுப்புவேன்.

பெரியவன் அவனா எல்லா வேலையும் பண்ணிப்பான் சின்னதுக்கு எல்லாம் நம்ம தான் செய்யணும். எழுப்பி விட்டு பல் தேய்க்க வச்சு இரண்டுக்கும் டீ போட்டு கொடுப்பேன்.


டீ குடிச்சதும் ரெண்டும் சுறுசுறுப்பாகி அடிச்சு பிடிச்சு விளையாட ஆரம்பிக்குங்களா அந்த சத்தத்துல வீட்டுக்காரர் எந்திருச்சு ரெடியாகிடுவார். அதுக்குள்ள நானு சோறும் ஒரு கொழம்பும் வச்சிடுவேன்.

அப்பறம் சின்னவன குளிக்க வச்சு டிரஸ் மாட்டி விட்ருவேன். அவனுக்கு டை ,பெல்ட் மாட்டி விட்றது, சாக்ஸ் ஷூ எல்லாம் வீட்டுக்காரர் வேலை

அதுக்குள்ள ரெண்டு பசங்களுக்கு வீட்டுக்காரருக்கு லன்ச் பேக் பண்ணிடுவேன். எல்லாரும் கிளம்பிணும் தான் எங்களுக்கு பெண்டு நிமிர்ற வேலையிருக்கும். கழட்டிப் போட்ட ஈரத்துண்டுல இருந்து சாப்ட்டு மிச்சம் வச்ச தட்டு வரைக்கும் எல்லாத்தையும் எடுத்து ஒழுங்குப்படுத்தணும் கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணனும்.

அப்பறம் பாத்தரம் கழுவுறது, துணி துவைக்கிறது,காயப்போடறது, பழைய துணிய மடிச்சு வைக்கிறது. மறுநாள் வீட்டுக்காரருக்கு சட்ட அயர்ன் பண்ணி வைக்கன்னு நாலு மணியாகிடும். இன்னும் கொஞ்ச நேரத்துல புள்ளைங்க வந்திடுமேன்னு நிம்மதியா தூங்க கூட முடியாது.

சில பேரெல்லாம் குழந்தைங்கள ஸ்கூல்ல போய் விட்டுட்டு கூட்டிட்டும் வருவாங்க… அப்பறம் நைட் சாப்பாடு வேலை. குழந்தைங்களுக்கு ஸ்கூல் வொர்க் ஆல்பம் வொர்க் அது இதுன்னு அவங்களுக்கு நிறைய எடுபிடி வேலை செய்யணும்..

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா மறு நாளுக்கு வாங்க வேண்டிய காய்கறி, வெளிய கோவில்,பலசரக்கடை, சொந்தக்காரங்கன்னு எதாவது வேலை இருந்துட்டேயிருக்கும்.


நல்ல நாளும் அதுவுமா வீடு தொடைக்கலையா… பூஜை பண்ணலயான்னு வேறு கேப்பாங்க அதையும் பாக்கணும்.

பட்டியல் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான்…. அட ஆமால்ல நம்ம சாப்ட்டு தட்ட அப்டியே போட்டுட்டு கிளம்பி அவசரத்துக்கு காலைல ஓடுறோம். போட்டது போட்டபடி வீடே பரப்பிக் கிடக்கும். சாய்ந்திரம் போகும் போது வீடு அவ்ளோ க்ளீனா இருக்குமேன்னு நினைக்கவே தோணுது.

இதெல்லாம் அம்மாவோட கடமைன்னு யாருமே சொல்லல நாங்களாத்தான் பண்றோம். இது நம்ம குடும்பம் நம்ம தான செய்யணும்ன்ற ஓர் எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம். இத்தனையும் செய்த பிறகும் எங்களுக்கு கிடைக்கும் பெயர்கள் என்னவோ சும்மாதான இருக்க என்பது தான்.

ஆபிஸ் போற அம்மாக்களோட லைஃப் இன்னும் பரபரப்பா இருக்கும். கொஞ்சம் வசதியானவங்கன்னா வீட்டு வேலைக்கு பாத்திரம் கழுவ, கூட்டி தொடைக்கன்னு ஆள் தனியா வச்சிப்பாங்க ஆனா எல்லாருக்கும் அப்படியான வசதி வாய்ப்பு இருக்குன்னு சொல்ல முடியாதுல்ல.

டபுள் வொர்க் இருக்கும். அவங்கள கிளப்புறதோட நம்மலும் கிளம்பணும்.அரக்க பரக்க கிளம்பி ஆஃபிஸ் போன அங்க நிம்மதியா உக்காந்து ரிலேக்ஸா வேல பாக்க முடியுமா? டார்கெட் இன்னும் அச்சீவ் பண்ணல வொர்க்ல சாட்டிஸ்ஃபேக்‌ஷன் இல்லன்னு கத்த நம்ம பரபரப்பா ஓடணும்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!