கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை – சீனா அறிவிப்பு


கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலும் உடனடி மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் முதன் முதலில் வுகான் நகரில் தான் கொரோனா நோய் பரவியது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை சென்றதும் அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு வுகான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி முடித்தது. இதில் 1600 படுக்கைகள் இருந்தன.

இப்போது இதேபோன்ற மருத்துவமனையை இந்தியாவிலும் கட்டிக் கொடுக்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.

சீன ரெயில்வே கட்டுமான கழக அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோள்காட்டி சீனாவில் இருந்து வெளிவரும் அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்தியா கேட்டுக் கொண்டால் மட்டுமே இவ்வாறு மருத்துவமனை கட்டிக் கொடுக்க முடியும். அதற்கான சப்ளை பொருட்கள் தடையின்றி கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

சீன ரெயில்வே கட்டுமான கழகம் உலக அளவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடியாகும். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானத்தை பெறுகிறது. இந்த நிறுவனம் உலக அளவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் அந்த நிறுவனம் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உலக வங்கி 9 மாதங்கள் அதற்கு தடை விதித்து இருந்தது. அந்த நிறுவனம் தான் இப்போது இந்தியாவில் மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா? என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் இந்தியா சீனாவில் இருந்து ஏராளமான வென்டிலேட்டர் கருவிகள், என்-95 முககவசங்கள் மற்றும் அவசரகால நோய் தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை வாங்க முடிவு செய்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!