கொரோனா வைரசில் இருந்து குணமடைந்த 101 வயது முதியவர்..!


கொரோனா வைரசால் கடும் அழிவை சந்தித்துள்ள இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தடுமாறி வருகின்றன. உலக அளவில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், முதியவர்களே பெரும்பாலும் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரசால் கடும் மனித பேரழிவை சந்தித்துள்ள இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.

ரிமினி பகுதியைச் சேர்ந்த இந்த முதியவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கொரோனாவுக்கு மருந்துகள் இல்லாத நிலையில், மாற்று மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மூலமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அவரது உடல்நிலை சீரானது. இதனையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டார் முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், 101 வயது முதியவர் குணமடைந்திருப்பது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவர் குணமடைந்திருப்பதன் மூலம் அனைவரின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பார்த்ததாக ரிமினி நகர துணை மேயர் கூறி உள்ளார்.

தற்போது உலகம் கடந்து வரும் கடினமான தருணங்களுக்கு மத்தியில், இது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!