கொரோனா இருக்கலாம் என சந்தேகம்… குடும்ப தலைவர் எடுத்த விபரீத முடிவு..!


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் தனக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தினாலும், வைரஸ் குடுபத்துக்கு பரவிவிடும் என்ற அச்சத்தாலும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 748 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதைவிட படு வேகமாக சமூக வலைதளங்களில் வைரஸ் தொடர்பான செய்திகள் பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

அதன் உச்சமாக தனக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், வைரஸ் குடும்பத்துக்கும் பரவிவிடலாம் என்ற அச்சத்திலும் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பென்ட்வால் பகுதியை சேர்ந்தவர் சதாசிவ ஷெட்டி(56). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பதால் அங்கு வருபவரிடமிருந்து தனக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என சதாசிவ ஷெட்டி சந்தேகம் வந்தது.

ஆனால், வைரஸ் தொடர்பான எந்த பரிசோதனைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் அவர் மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார்.

ஒரு வேளை தனக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தால் அது தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவி விடும் என்றும் சதாசிவ ஷெட்டி அச்சமடைந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த சதாசிவ ஷெட்டி கொரோனா அச்சம் காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை தொடர்பாக சதாசிவ ஷெட்டியின் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!