நாளை மறுநாள் தூக்கு.. இன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது – பீதியில் நிர்பயா குற்றவாளிகள்..!


நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவது குறித்த ஒத்திகையை இன்று(புதன்கிழமை) மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லத் என்கிற பணியாளர் நடத்துகிறார்.

டெல்லியில், ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகே‌‌ஷ்குமார் சிங்(வயது32), அக்‌‌ஷய்குமார் சிங்(31), வினய் சர்மா(26) மற்றும் பவன்குப்தா(25) ஆகிய 4 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கோர்ட்டு பிறப்பித்த 4-வது மரண உத்தரவின்படி 4 பேரும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) தூக்கிலிடப்பட வேண்டும். இதற்காக திகார் சிறை நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்காக உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லத் என்கிற பணியாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் நேற்று, டெல்லி திகார் சிறைக்கு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று(புதன்கிழமை) தூக்கில் போடுவது குறித்த ஒத்திகையை அவர் நடத்துகிறார். நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு 4 பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!