கோரமாக உயிர்ப்பலியெடுத்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு


ஹாலந்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் 10 ஆய்வாளர்கள் தாங்கள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரசை அழித்து மக்களை காப்பற்றுவதற்காக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாலந்து, ரஷியா உள்பட பல நாடுகளில் உள்ள மருத்துவர்கள் போட்டி போட்டு இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை முதலில் விலங்குகளுக்கு கொடுத்து சோதித்து பார்த்தனர். அதில் வெற்றி கிடைத்தது.

இதையடுத்து இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்கும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. முதல் கட்டமாக நேற்று 45 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது.

இந்த 45 பேரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட இவர்கள் கொரோனா வைரசை ஒழிப்பதற்காக தாமாக முன்வந்துள்ளனர். இவர்களில் முதன் முதலில் ஜெனீபர் காலர் என்ற பெண்ணுக்கு முதல் தடுப்பு மருந்து ஊசி போடப்பட்டது.

43 வயதாகும் அவர் 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். தடுப்பு சோதனை ஊசியை போட்டுக் கொண்ட அவர் தற்போது தனிமை அறையில் வைக்கப்பட்டுள்ளார். மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த தடுப்பு மருந்து ஆய்வு முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியாட்டில் பரிசோதனை கூடத்தில் கொரோனா வைரசில் இருந்து மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத சில மரபணு குறியீடுகள் பிரித்து எடுக்கப்பட்டது. அது தடுப்பு மருந்தில் சேர்த்து போடப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. முழு வெற்றி கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹாலந்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் 10 ஆய்வாளர்கள் தாங்கள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த ஆய்வு குழுவினர் கொரோனா வைரசின் முதல் 6 பிரிவுக்கு மருந்து கண்டுபிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கவர்கள்.

6-வது வகை கொரோனாவுக்கு இவர்கள் முன்பு மருந்து கண்டுபிடித்து இருந்தனர். இதன் அடுத்த கட்ட ஆராய்ச்சியை கடந்த சில மாதங்களாக இவர்கள் செய்து வந்திருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது 7-வது வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் பரவியதும் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகளின் அடிப்படையில் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்தனர்.

அந்த தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்தனர். அதில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் அது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் வெற்றி கிடைத்தால் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!