கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கிய ஓட்டல் இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாக பலி..!


சீனாவில் கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கிய ஓட்டல் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்தது. அதில் அங்கு தங்கியிருந்த 71 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு 38 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மற்ற 33 பேரை மீட்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகி இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!