மேற்கு வங்காளத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் நாய் படம்- முதியவர் அதிர்ச்சி


மேற்கு வங்காளத்தில் வாக்காளருக்கு நாய் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது முதியவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (வயது 63). இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்தார்.

திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அடையாள அட்டையை வாங்கிய சுனிலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், அவரது படத்துக்கு பதிலாக நாய் புகைப்படம் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இது தொடர்பாக சுனில் கூறுகையில், ‘என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்துக்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டு உள்ளார். ஆனால், அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன்’ என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி இதுபற்றி கூறுகையில், ‘அட்டையில் நாய் புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய விஷயம். ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும்போது, அதிகாரி ஒருவரால் இந்த தவறு நடந்துள்ளது. விரைவில், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!