முகநூலில் குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்த என்ஜினீயரால் பரபரப்பு..!


குழந்தைகளின் ஆபாச படங்களை முகநூலில் பகிர்ந்த என்ஜினீயரை தர்மபுரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோழராஜன். இவருடைய மகன் சீனு (வயது 26). என்ஜினீயர். இவர் ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் தரம் பார்க்கும் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கடந்த ஆண்டு தனது செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் பல்வேறு முகநூலில் அந்த படங்களை பகிர்ந்து உள்ளார். இதுதொடர்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவை சரக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அளித்த தகவலின்பேரில் உரிய விசாரணை நடத்த தர்மபுரி சைபர் கிரைம் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் பிற ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை முகநூலில் சீனு பகிர்ந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவாஸ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் சீனுவை நேற்று கைது செய்தனர்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!