பிரதமருடன் கை குலுக்க மறுத்த உள்துறை மந்திரி… கொரோனா பீதியால் நடந்த களேபரம்.!


கொரோனா பீதி காரணமாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் அந்நாட்டு உள்துறை மந்திரி கை குலுக்க மறுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 73 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதற்கிடையில், மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாக பரவும் இந்த வைரசை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் விஞ்ஞானிகள் திகைத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியிலும் 158 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துவருகின்றனர்.

இந்நிலையில், ஜெர்மனியில் வசித்துவரும் வெளிநாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கான அமைப்புகளுடன் தலைநகர் பெர்லினில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், உள்துறை மந்திரி ஹொர்ஸ்ட் சிஹொபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் தொடங்கும்போது அங்கு வந்த பிரதமர் ஏஞ்சலா, உள்துறை மந்திரி அமர்ந்திருந்த இருக்கை நோக்கி சென்று மரியாதை நிமித்தமாக கை குலுக்க தனது கையை நீட்டினார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக உள்துறை மந்திரி ஹொர்ஸ்ட் சிஹொபர் பிரதமர் ஏஞ்சலாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏஞ்சலா நிலைமையை புரிந்துகொண்டு அங்கிருந்து சிரித்தபடி விலகி சென்றுவிட்டார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!