ஆண் குழந்தையை கொன்று தாய் தற்கொலை.. அதிர வைத்த காரணம்..!


அவினாசி அருகே குடும்ப தகராறு காரணமாக ஒரு வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் அவினாசி அடுத்துள்ள பெரியாயிபாளையம் ஜே.ஜே. நகரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி துர்கா (28). திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று பிரபாகரன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த துர்கா தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


குழந்தை கட்டிலிலும், துர்கா தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவினாசி போலீசுக்கும் துர்காவின் கணவருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் அவினாசி டி.எஸ்.பி. பாஸ்கர், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு வந்தனர். தாய், குழந்தை ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனம் உடைந்த துர்கா தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணமாகி 3 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அவினாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!