நாய் சங்கிலியில் இழுத்து சென்று.. குரைக்க சொன்ன கொடூரம்; மனைவி குடும்பத்தினர் வெறிச்செயல்


உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் கணவரை நாய் சங்கிலியில் இழுத்து சென்று குரைக்க சொன்ன கொடூரம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நகரில் வசித்து வருபவர் இக்ராமுதீன். இவரது திருமணம் நீதிமன்ற உத்தரவின்கீழ் நடந்தது. இந்த திருமணத்திற்கு இக்ராமுதீனின் மனைவி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்று பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதில் நபர் ஒருவரை நாய் சங்கிலியில் கட்டி இழுத்து சென்று, அவரை குரைக்க சொல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதுபற்றி இக்ராமுதீன் கூறும்பொழுது, கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் இந்த சம்பவம் நடந்தது. நீதிமன்ற உத்தரவின்படி நடந்த எங்களுடைய திருமணத்தில் மனைவியின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி இல்லை. அதனால் அவர்கள் என் மீது தாக்குதல் நடத்தி, இந்த சம்பவம் முழுவதனையும் வீடியோவாக எடுத்தனர்.

எனது மனைவியின் இளைய சகோதரர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். அதனால் போலீசார் இந்த சம்பவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிக வருத்தத்துடன் கூறுகிறார்.

இந்நிலையில், சடார் காவல் நிலைய கான்ஸ்டபிளான பிரபத் குமார் கூறும்பொழுது, வீடியோ பதிவு ஒன்று எங்களுக்கு கிடைத்து உள்ளது. ஒவ்வொரு கோணத்திலும் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி எங்களுக்கு உத்தரவு கிடைத்து உள்ளது என கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!