அமெரிக்காவுக்கு இலங்கை அரசு கண்டனம்… ராணுவ தளபதிக்கு தடை!


ராணுவ தளபதிக்கு தடை விதித்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசும், அந்நாட்டு எதிர்க்கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் ராணுவ தளபதியாக இருந்தவர் ஷவேந்திர சில்வா. தற்போது இலங்கையின் ராணுவ தளபதியாக உள்ளார். அவர் மீதான போர்குற்றங்களை முன்வைத்து அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசும், அந்நாட்டு எதிர்க்கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே கூறுகையில், ‘சில்வா விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை மட்டுமே முன்னின்று நடத்தினார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதித்தது. தற்போது எங்களது ராணுவ தளபதிக்கு விதித்துள்ள தடையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அரசு தனது நிலைப்பாட்டை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தும். இதுகுறித்து விளக்கம் அளிக்க இலங்கைக்கான அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடம் ஆலோசிக்கப்படும்’ என்று தெரிவித்தார். இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் சஜீத் பிரேமதேசாவும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!