குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி


ஆத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி திவ்யா (வயது30). இவர்களுக்கு வர்னிஷா (3), தன்ஷிகா (1) என்ற 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை திவ்யா அவரது குழந்தைகள் 2 பேரையும் அழைத்து கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு அவர் 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு திவ்யாவும் குதித்தார்.

அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றில் இருந்து 3 பேரையும் மேலே கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த 2 குழந்தைகளையும் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

கிணற்றில் குதித்த திவ்யாவிற்கு பாறையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் திவ்யாவிடமும், அவரது கணவர் இளைய ராஜாவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
b