ரவுத்திரம் பட வில்லன் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்


நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, தமிழில் நடிகர் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில், கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து வந்த 35 வயது நடன நடிகை மும்பை அம்போலி போலீஸ் நிலையத்திலும், பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த கணேஷ் ஆச்சார்யா, தன் மீது பொய்யாக பாலியல் புகார் கூறிய நடன நடிகை மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று கூறினார்.

இந்த நிலையில், நடன நடிகை கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் கணேஷ் ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கணேஷ் ஆச்சார்யாவுக்கு உடந்தையாக செயல்பட்டு நடன நடிகையை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ கேல்கர், பிரீத்தி லாட் ஆகிய இரண்டு பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!