பள்ளி மாணவன் கொடூர கொலை… கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கிணற்றில் வீச்சு..!


செங்கல்பட்டு அடுத்த வேம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா. இவர்களது மகன் புருஷோத்தமன் (வயது 14). செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஆகும். புருஷோத்தமன் தன்னுடைய தாய் உஷாவுடன் வேம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கடந்த 7 ஆண்டு காலமாக வசித்து வந்தார். உஷா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் புருஷோத்தமனை கடந்த 6-ந்தேதி முதல் காணவில்லை என செங்கல்பட்டு தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வெண்பாக்கம் சாரதாம்பாள் நகரில் ஒரு தனியார் கிணற்றில் ஒரு உடல் மிதப்பதாக போலீசாருக்கு ஐ.டி.ஐ. மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.

புருஷோத்தமன் கடவுள் பக்தி உடையவர் என்பதும் உடல் மீட்கப்பட்ட கிணற்றின் அருகே உள்ள சிவன் கோவிலில் தினந்தோறும் சாமி கும்பிடுவதை புருஷோத்தமன் வழக்கமாக கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் கம்பியால் கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

யாரேனும் மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!