திடீரென உடம்பில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்த 11-ம் வகுப்பு மாணவி.. அதிர வைத்த காரணம்..!


நாகை அருகே தேர்வில் மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தால் தீக்குளித்து 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்தார்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ப.கொந்தகை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகள் தீபிகா(வயது15). இவர் திட்டச்சேரி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தீபிகா கடந்த மாதம் நடந்த அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கி விடுவோம் என்ற அச்சத்தில் இருந்தார்.

மேலும் மதிப்பெண் குறைந்தால் தனது பெற்றோரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் மனஉளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்எண்ணெய்யை உற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய தீபிகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்கு பின் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது வழியிலேயே ஆம்புலன்சில் தீபிகா உயிரிழந்தார்.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தால் தீக்குளித்து மாணவி தற்கொலை செய்த சம்பவம் திட்டச்சேரி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!