கூண்டிலிருந்து ‘என்னை வெளியே விடு’ என கீச்சிட்ட கிளியை காப்பாற்ற வந்த போலீசார்..!


அமெரிக்காவில் என்னை வெளியே விடு என கீச்சிட்ட கிளியின் குரலை கேட்டு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்த சம்பவம் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ளது லேக் வொர்த் பீச் நகரம். சம்பவத்தன்று இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ‘என்னை வெளியே விடு என்னை வெளியே விடு’ என மெல்லிய குரலில் தொடர்ந்து சத்தம் கேட்டுள்ளது.

இதைக்கேட்ட பக்கத்து வீட்டு பெண் ஒருவர், அந்த குரல் ஒரு பெண் அல்லது குழந்தையின் குரலாக இருக்கலாம் என நினைத்து உதவி கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவ்வீட்டு உரிமையாளரிடம், வீட்டினுள் இருந்து சத்தம் கேட்டது பற்றி விசாரித்தனர். இதையடுத்து தனது வீட்டிற்குள் விரைந்து சென்ற அந்த நபர் தனது செல்லப்பிராணியான கிளியுடன் வெளியில் வந்தார். கிளிதான் என்னை வெளியே விடு என கீச்சிட்டது என்பதை அறிந்ததையடுத்து அந்த போலீசாரும், தகவல் அளித்த அண்டை வீட்டு பெண்ணும் புன்னகைத்தபடியே திரும்பி சென்றனர்.

இது குறித்து கிளியின் உரிமையாளர் கூறுகையில், ‘40 ஆண்டுகளாக இந்த கிளி எனது வீட்டில் உள்ளது. நான் சிறுவனாக இருந்தபோது இந்த கிளியை கூண்டிற்குள் வைத்திருந்தேன். அப்போது என்னை வெளியே விடு என்று கூற கிளிக்கு கற்றுக்கொடுத்தேன். சில சமயங்களில் கிளி இவ்வாறு கீச்சிடும்’ என தெரிவித்தார்.

போலீசார் அவரை விசாரிப்பதும், அவர் கிளியை தனது கையில் கொண்டு வரும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!