டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.576 கோடி பரிசு – ஈரான் அதிரடி..!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ஈரான் ரூ.576 கோடி பரிசு அறிவித்து உள்ளது.

பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போா் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ஈரானில் 8 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஈரானைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சார்பில் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஈரான் அதிபர் பேசுகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது, சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம். போர் அறிவிக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு தான் தோல்வியாக அமையும் என்று எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!