யானை மிதித்து பலி…. தமிழக ஐயப்ப பக்தர் உடலை 8 கிலோ மீட்டர் சுமந்து வந்த ஊழியர்கள்..!


சபரிமலையில் யானை மிதித்து பலியான ஐயப்ப பக்தரின் உடலை மீட்ட வனதுறையினர் 8 கிலோ மீட்டர் சுமந்து வந்து பம்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்.

சபரிமலை சுவாமி ஐயப்பபன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மகரவிளக்கு பூஜை வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது.

இதற்காக கோவிலின் நடை கடந்த மாதம் 30-ந் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே சபரிமலைக்கு ஐயப்பப பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. தற்போது மகரவிளக்கு பூஜைக்கு ஒரு வாரமே இருப்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.

இதனால் பக்தர்களை பம்பையில் இருந்தே குழு, குழுவாக போலீசார் அனுப்பி வைக்கிறார்கள். சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து உள்ள ஐயப்பப பக்தர்கள் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்பதற்காகவும், மகரஜோதியை தரிசிப்பதற்காகவும் தற்போதே சபரிமலையில் ஆங்காங்கே கூடாரம் அமைத்து தங்க தொடங்கிவிட்டனர். சபரிமலை சன்னிதானம் நோக்கி பக்தர்கள் நடந்து செல்லும் பெருவழிப்பாதை என்று அழைக்கப்படும் எருமேலி பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்த இடம் ஆகும். தற்போது இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்து இருந்தனர்.

இந்த நிலையில் கோவையில் இருந்து சென்ற 13 ஐயப்பப பக்தர்கள் கொண்ட குழுவினர் இந்த பகுதியில் உள்ள முக்குழி என்ற இடத்தில் இரவு முகாமிட்டு இருந்தனர். அதிகாலை நேரத்தில் அங்கு யானைகள் கூட்டம் வந்ததால் பயந்துபோன பக்தர்கள் ஓட்டம்பிடித்தனர்.

அப்போது கோவை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பத்ரப்பா (வயது 58) என்ற ஐயப்பப பக்தர் யானைகள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். இதில் யானை மிதித்து அவர் பலியானார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஐயப்பப பக்தர்கள் வனத்துறையினருக்கு இந்த தகவலை செல்போன் மூலம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பத்ரப்பாவின் உடலை மீட்டனர்.

அவரது உடலை வனப்பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் சுமந்து பம்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது.

சபரிமலை செல்லும் பெருவழிப்பாதையில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் ஐயப்பப பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்லும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். இரவு நேரத்தில் இந்த பாதையில் ஐயப்பப பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஐயப்பப பக்தர்களின் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் வன ஊழியர்கள் ரோந்துப்பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!