நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ கொரிய படத்தின் கதையா..?


விஜய்யின் மாஸ்டர் படம் கொரிய படத்தின் சாயலில் தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் நாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு டெல்லியிலும் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் ஏற்கனவே நடந்துள்ளது.

தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்துக்கு ‘மாஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்து விஜய்யின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதனை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாஸ்டர் படம் ‘சைலன்ஸ்டு’ என்ற கொரிய படத்தின் சாயலில் தயாராவதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. மாஸ்டர் மற்றும் சைலன்ஸ்டு போஸ்டர்களை இணைத்தும் வைரலாக்கப்படுகிறது. சைலன்ஸ்டு படத்தின் கதையில், மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நாயகன் வேலையில் சேருகிறார். அவரை பார்த்ததும் மாணவ-மாணவிகள் பயந்து ஓடுகிறார்கள்.

நாயகன் குழப்பமாகி விசாரணையில் ஈடுபட அவர்கள் பாலியல் துன்புறுத்தலில் சிக்கி இருப்பது தெரிய வருகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக நாயகன் களம் இறங்கி அவர்களை தண்டிப்பதுபோல் காட்சிகள் உள்ளன. இந்த படம் கொரியாவில் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால்தான் விஜய் படப்பிடிப்பு மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் சிறையிலும் நடத்தப்படுகிறது என்றும் தகவல் பரவி வருகிறது.” ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!