22 வயது பெண்ணின் உயிரை பறித்த செல்போன்.. கணவருடன் பேசியபோது நடந்த விபரீதம்..!


கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது இரண்டாவது மாடியிலிருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் வசிக்கும் திருமலை என்பவரின் மகள் செல்வி. 22 வயதான இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த செல்விக்கு பெண் குழந்தை பிறந்து தற்போது 9 மாதங்கள் ஆகிறது. குழந்தை குறிப்பிட்ட வயது வளரும் வரை பெற்றோர் வீட்டில் இருப்பதென செல்வி முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் அவ்வப்போது புதுச்சேரி வந்து தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்து செல்வார்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த, செல்வி தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வீட்டின் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டவுடன் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது செல்வி தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடந்தார்.

உடனடியாக செல்வியை மீட்ட பெற்றோர்கள் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக செல்வி உயிரிழந்தார். இதுகுறித்து செல்வியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் பேசி கொண்டிருந்தபோது இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சம்பவம் நடைபெற்றபோது செல்வி கீழே விழும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!