22 வயதில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியான குஜராத் வாலிபர்…!


குஜராத்தை சேர்ந்த ஹசன் சபீன் 22 வயதில் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் பாலன்புரின் கனோடர் கிராமத்தை சேர்ந்த ஹசன் சபீன் சிறுவயது முதலே ஐ.பி.எஸ். அதிகாரி ஆவதே தனது லட்சியமாக கொண்டிருந்தார். வைர நகை தொழிலாளர்களாக வேலை செய்த இவரது பெற்றோரின் வருமானம் குடும்பத்தின் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால், சபீன் படிக்க சிரமப்பட்டுள்ளார்.

மகனின் படிப்புக்கு உதவும் வகையில், அவரது தாயார் உணவகங்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்து பணம் சம்பாதித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சபீன் படிக்க உதவி செய்தனர்.

கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 570-வது ‘ரேங்க்’ பெற்று சபீன் ஐ.பி.எஸ்.-ஆக தேர்வானார். இதனையடுத்து வருகிற 23-ந்தேதி ஜாம்நகர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற பெருமையை சபீன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சபீன் கூறுகையில், ‘இந்த வெற்றியை நான் மட்டும் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு தான் எனது வெற்றிக்கு காரணம்’ என்று தெரிவித்தார். முதல்முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத சென்றபோது ஹசன் விபத்தில் சிக்கினார். இருப்பினும் அவர் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற இயலாவிட்டாலும், 2-வது முறையாக தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!