வகுப்பறையில் கத்தியால் மணிக்கட்டை அறுத்து பேராசிரியை தற்கொலை.. அரும்பாக்கத்தில் பரபரப்பு


அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி வகுப்பறையில் முன்னாள் பெண் பேராசிரியை ஒருவர் கத்தியால் மணிக்கட்டை அறுத்து கொண்டு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், காரம்பாக்கம் தாலுகா, எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரிசாந்தி (32). இவர், கடந்த 5 வருடத்துக்கு முன், சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்கு பாடப்பிரிவில் உதவி பேராசிரியையாக பணியாற்றினார். தற்போது வேறு ஒரு கல்லூரியில் பணியாற்றி வந்தார். அதற்கு பிறகும், வைஷ்ணவா கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

அதுபோன்று நேற்றிரவும் கல்லூரிக்கு சென்றார். அங்கு, ஏற்கனவே தான் பணியாற்றிய, முதல் மாடியில் உள்ள தெலுங்கு வகுப்பறைக்கு சென்றார். பின்னர், திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, இடது கை மணிக்கட்டை சரசரவென அறுத்தார். ரத்தம் கொட்டியது. அலறினார். சிறிது நேரத்தில், வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலையில் வழக்கம் போல கல்லூரியை சுத்தம் செய்ய ஊழியர்கள் வந்தனர். அப்போது, முதல் மாடியில் உள்ள வகுப்பறையில் ஹரிசாந்தி தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, பேராசிரியையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின்பேரில் புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர் சீனிவாசலு, அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து, பேராசிரியை எதற்காக வந்தார்? இரவு நேரத்தில் செக்யூரிட்டி தடுக்காதது ஏன்? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.-Source: murasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!