ராகுல் காந்தி குடும்பம் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல பாலிவுட் நடிகை அதிரடி கைது


நேரு குடும்பம் பற்றி அவதூறாக கருத்துக்களை சமுக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை பாயல் ரோஹத்கியை ராஜஸ்தான் மாநில போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி. இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் ஆவார்.

நடிகை பாயல் ரோத்தகி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சையான கருத்துகளை அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைப்பதும் வழக்கம்.

கடந்த செப்டம்பர் 6 மற்றும் 21ம் தேதிகளில் பாயல் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய அவதூறான தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோவை பார்த்து கொதித்துப்போன காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிராக போலீசார் புகார் அளித்தனர்.

ராஜஸ்தான் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சர்ரமேஷ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தகவல் தொழில்நுப்ட சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபரில் வழக்கு பதிவு செய்த ராஜஸ்தான் போலீசார், நடிகை பாயல் ரோஹத்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இதற்கு நடிகை பாயல் விளக்கம் அளிக்காமல் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால ராஜஸ்துன் மாநில போலீசார் நேற்று அஹமதாபாத் சென்ற பாயலை பிடித்து சென்றனர். அவரிடம் ராஜஸ்தானின் பந்தி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி நடிகை பாயல் தனது டுவிட்டர் பக்கத்தில், கூகுளின் வந்த தகவலின் அடிப்படையில் வெளியிட்ட வீடியோவுக்காக ராஜஸ்தான் போலீசார் என்னை கைது செய்திருக்கிறார்கள். பேச்சு சுதந்திரத்திற்காக கேலிக்கூத்து என்று விமர்சித்துள்ளார்.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் பாந்தி மாவட்ட எஸ்பி மம்தா குப்தா கூறுகையில், பாயலை முறைப்படி இன்னும் கைது செய்யவில்லை. விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம் என்றார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!