மகள் திருமணத்திற்கு வாங்கிய கடன்… மனைவியுடன் பால் வியாபாரி விபரீத முடிவு..!


மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாத விரக்தியில் மனைவியுடன் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் சூரமங்கலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 56). இவருடைய மனைவி கண்மணி (49). இவர்களுக்கு பரமேஸ்வரி, வளர்மதி என 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. மணியும் அவருடைய மனைவியும் வீட்டின் முன்பு ஒரு கடை வைத்து அதில் ஆவின் பாலை வாங்கி விற்பனை செய்து வந்தனர். இதனால் காலை நேரங்களில் அவர்களின் கடையில் வியாபாரம் மும்முரமாக நடைபெறும்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மணி கடை முன்பு ஆவின் பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்பட்ட நிலையிலே இருந்தது. பால் வாங்குவதற்காக வழக்கமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காலை 7 மணிவரை காத்திருந்தனர். இருந்தபோதிலும் அவரின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

கணவன், மனைவி தற்கொலை

அப்போது மணி மற்றும் கண்மணி ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மணியின் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை கீழே இறக்கினர்.

இதையறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

திருமணத்திற்கு கடன்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மணி தனது 2-வது மகள் திருமணத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து மணியிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். வாங்கிய கடனை எவ்வாறு அடைக்க போகிறேன் என மணி உறவினர்களிடம் கூறி மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மணி, தனது மனைவியுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் மணியிடம் கடன் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டினார்களா? அல்லது கந்து வட்டி தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!