மனைவியை அடித்து கொன்று லாரி டிரைவர் எடுத்த விபரீத முடிவு..!


வத்தலக்குண்டு அருகே மனைவியை அடித்து கொன்ற லாரி டிரைவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்தலக்குண்டு அருகே உள்ள எழவனம்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன்(வயது40). இவர் போர்வெல் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாண்டியம்மாள்(36). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகள் உள்ளார். அவரை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பால்பாண்டி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இருளப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டுவந்து வீட்டில் தகராறு செய்வாராம். இதனால் பாண்டியம்மாள் கோபித்துகொண்டு அடிக்கடி தனது மகள் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். கடந்த வாரம் இதுபோல் இருளப்பன் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார்.

இதனால் பாண்டியம்மாள் கோபித்துக்கொண்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பாண்டியம்மாளை தனது வீட்டுக்கு வருமாறு அழைக்க இருளப்பன் சென்றார். அங்கு பாண்டியம்மாளை உறவினர்கள் சமரசம் செய்து கணவருடன் அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் நேற்று வெகுநேரமாகியும் பாண்டியம்மாளின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அவரது மகளுக்கு தகவல் கொடுத்தனர். மகள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பாண்டியம்மாள் இறந்து கிடந்தார். அருகில் சேலையில் தூக்கில் தொங்கியவாறு இருளப்பனும் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகள் ஸ்ரீதேவி கதறி அழுதார். இதுபற்றி வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஷேக் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர்.

இருளப்பன், பாண்டியம்மாள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பாண்டியம்மாளை கணவர் இருளப்பன் கொலை செய்து போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!