லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகி.. உயிரை விட்ட நர்ஸ் கார்த்திகா!


வெறும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொண்டு.. எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு.. சஸ்பெண்ட் செய்யப்பட்டு.. கடைசியில் அவமானத்தில் தூக்கு போட்டு தொங்கியே விட்டார் நர்ஸ் கார்த்திகா!

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில், மகப்பேறு வார்டில் செவிலியர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, பரவையை சேர்ந்த தனிக்கொடி என்பவருடைய உறவுக்காரப் பெண்ணிற்கு இங்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை உறவினர்களிடம் காட்ட வேண்டும் என்று சொல்லி அனுமதி கேட்கவும், அதற்கு அங்கிருந்த நர்ஸ் கார்த்திகா, ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனிக்கொடி, இதை பற்றி புகார் அளிக்கவும், அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணி விசாரணை நடத்தினார்.. இதற்காக 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தார்.. அப்போது கார்த்திகா 1000 ரூபாய் லஞ்சம் பெற்றது உறுதியானது. அதனால், போன நவம்பர் 18-ம் தேதி கார்த்திகாவை ஆஸ்பத்திரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதனால் அவமானத்திலும், அசிங்கத்திலும் தவித்தார் கார்த்திகா.. மன உளைச்சலிலேயே இருந்தவர், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திலகர் திடல் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த குழந்தையை எடுத்துவந்து உறவினர்களிடம் காட்டுவதற்கு, ஆயிரம் ரூபாய் நர்ஸ் கார்த்திகா லஞ்சம் கேட்டதும், அது சம்பந்தமாக சஸ்பெண்ட் செய்யப்படவும் அவமானத்தில் தூக்கில் தொங்கியதும் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!