பிந்து மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே தாக்குதல்… சபரிமலைக்கு புறப்பட்டதால் நடந்த களேபரம்..!


சபரிமலைக்கு செல்வதற்கு தயாரான பிந்து பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தபோது அவர் மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தப்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமான பெண்கள் பதிவு செய்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை செல்வதற்காக பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து, சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனர்.

அப்போது, சபரிமலைக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர், திடீரென பிந்து மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கடந்த ஆண்டும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ததால் பிந்துவின் வீட்டின் முன்பு திரண்ட மர்ம நபர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் பதற்றம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, இந்த ஆண்டு சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்புகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!