குழந்தையை உயிருடன் புதைத்து கொன்றேன்- கைதான தந்தை பகீர் வாக்குமூலம்..!


திருக்கோவிலூர் அருகே பெண் குழந்தை பிடிக்காததால் உயிருடன் புதைத்து கொன்றேன் என்று கைதான தந்தை போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது. வடமருதூர் இந்த பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் வரதராஜன்(வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கும் சுந்தரேச புரத்தை சேர்ந்த சவுந்தர்யா(22) என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் சவுந்தர்யா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சவுந்தர்யாவுக்கு கடந்த 17 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுந்தர்யா தனது பெண் குழந்தையுடன் கணவன் வீட்டுக்கு வந்தார். குழந்தையை பார்த்ததும் வரதராஜன் ஆவேசம் அடைந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சவுந்தர்யா தனது குழந்தைக்கு பால் ஊட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த குழந்தையை காணவில்லை.

உடனே தனது கணவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது குழந்தையை அத்தண்டமருதூர் ஆற்றுப் பகுதியில் புதைத்து கொன்று விட்டதாக கூறினார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

வரதராஜை போலீசார் ஆற்றுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது பச்சிளம் பெண்குழந்தை பிணமாக இருந்தது.

இதுகுறித்து போலீசார் வரதராஜை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வரதராஜின் தந்தை துரைக்கண்ணுவையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வரதராஜ் போலீசிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், சவுந்தர்யாவுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. நாங்கள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தோம். என் மனைவி கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினாள். இதைகேட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நமக்கு ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்தேன். ஆனால் சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் தெரியவந்ததை கேட்டதும் நான் மனவேதனை அடைந்தேன்.

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பெண் குழந்தை பிறந்து விட்டது. ஆண் குழந்தை பிறந்தால் தான் என் தந்தை எனக்கு சொத்து தருவதாக கூறினார். ஆனால் நமக்கு சொத்து வேண்டாம். குழந்தை போதும் என்று என் மனைவி கூறினாள்.

சம்பவத்தன்று இரவு நானும், சவுந்தர்யாவும் சாப்பிட்டு விட்டு தூங்கினோம். நள்ளிரவு நேரத்தில் திடீரென்று நான் எழுந்தேன். பின்பு சவுந்தர்யா அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கினேன். ஒரு துண்டால் குழந்தையை போர்த்திகொண்டு அத்தண்டமருதூர் ஆற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றேன்.

பின்னர் ஆற்றுப் பகுதியில் குழி தோண்டி குழந்தையை உயிருடன் மூடினேன். அப்போது குழந்தை சத்தம் போட்டு அலறியது. சிறிது நேரத்தில் மூச்சுதிணறி இறந்து விட்டது. நான் அந்த இடத்தில் மணலை போட்டு நன்றாக மூடிவிட்டு வீட்டுக்கு சென்றேன்.

பின்பு வீட்டில் தூங்குவதுபோல் படுத்துகொண்டேன். காலையில் சவுந்தர்யா எழுந்து குழந்தையை தேடினாள். அப்போது என்னிடம் குழந்தை எங்கே? என்று கேட்டாள். நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன்.

பின்னர் சவுந்தர்யா அவரது உறவினர்களுடன் சென்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் என்னிடம் கிடுகிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!