லாரி-கார் மோதல்; ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி-மகள் பரிதாபமாக பலி

நெல்லை மாவட்டம் கீழக் கடையத்தை சேர்ந்தவர், மில்டன் ஜெயக்குமார்(வயது 59). தீயணைப்புத்துறையில் நிலைய அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மகள் ரெனிலா ரோஸ் (26).

கடையத்தில் ஜவுளிக்கடை திறக்க மில்டன் ஜெயக்குமார் முயற்சி செய்து வந்தார். இதற்காக ஜவுளி ஆர்டர் கொடுக்க அவரும், அவருடைய மகளும் காரில் சேலம் சென்றனர். பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காரை மில்டன் ஜெயக்குமார் ஓட்டினார். அவர்கள் கார் நேற்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு தோட்டக்கலை பண்ணை அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே மதுரையை நோக்கி ஒரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரியும், அந்த காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த மில்டன் ஜெயக்குமாரும், அவருடைய மகள் ரெனிலா ரோசும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்த ஜெராசுதீன்(43) லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தந்தை, மகளின் உடல்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.