ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்… ஏன் தெரியுமா..?


கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர்.

ஹாங்காங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.


இது தொடர்பாக ஹாங்காங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12-ந் தேதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.

இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவானவர்கள், இதில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள், சீனாவின் பலத்த குறைபாடுள்ள நீதி அமைப்பின்கீழ் ஹாங்காங் தள்ளப்படும் நிலை உருவாகும், கூடவே ஹாங்காங் நீதித்துறையின் சுதந்திரம் மேலும் கெட்டுப்போகும் என்கின்றனர்.

இந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர்.

வெள்ளை நிற உடை அணிந்து வர்த்தகர்கள், வக்கீல்கள், மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், மத குழுவினர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது.

போராட்டத்தில் கலந்து கொண்ட ராக்கி சாங் என்ற 59 வயது பேராசிரியர், “ இது ஹாங்காங்குக்கு முடிவுரை எழுதி விடும். இது வாழ்வா, சாவா போராட்டம் ஆகும். எனவேதான் நான் கலந்து கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

“மக்களின் குரல் கேட்கப் படவில்லை” என்று இவான் வாங் என்ற 18 வயது மாணவர் கருத்து கூறினார். இப்படி பல தரப்பினரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!