பொள்ளாச்சியில் இறந்த பெண்ணின் தன்மானத்தை காத்த தீயணைப்பு போலீஸ்…!


வீடீயோ விவகாரத்தால் பொள்ளாச்சியின் பெயர் நாடு முழுவதும் நாறிக் கிடக்கிறது. இப்படியான சூழலில் இப்படியும் பொள்ளாச்சியில் மனிதர்கள் உண்டு என்னும் சம்பவம் உருகவைத்துள்ளது.

கடந்த 13ம் தேதி பொள்ளாச்சி அருகில் உள்ள கெடிமேடி பி.ஏ.பி பாசனக் கால்வாயில் ஒரு கார் கவிழ்ந்தது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் துள்ளத், துடிக்க உயிர் இழந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

11 அடி ஆழம், இருபது அடிக்கு மேல் அகலம், வினாடிக்குச் சுமார் ஆயிரம் கன அடி நீர் விரைவாகவும் செல்லக்கூடிய கால்வாய் அது. அப்படிப்பட்ட நிலையிலும் ஒரு தீயணைப்பு வீரர் தண்ணீருக்குள் இறங்கினார். தனது இடுப்பில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டு கிரேன் உதவியுடன் மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த வெள்ளநீரில் இறங்கி முன்னேறினார்.

விடிந்தும், விடியாத அதிகாலை நேரம் அது. தன் உயிரையே அந்த பாதி வெளிச்சம் படர்ந்த அதிகாலையில் பணயம் வைத்துத்தான் தண்ணீரில் இறங்கினார். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் உயிர் இழந்த பெண்ணின் உடலை தண்ணீரின் மேல் மட்டத்துக்கு கொண்டு வந்தார். அப்போது தான் நீரின் ஓட்டத்தில் அந்த பெண்ணின் மேலாடை அடித்துச் செல்லப்பட்டு விட்டதைக் கவனித்தார்.

ஆனால் வெறும் உயிர் இழந்த உடல் தானே? என அப்படியே மேலே கொண்டு சென்றுவிட வில்லை. அந்த பெண்மைக்கு உரிய மரியாதையைக் கொடுத்தார். அவரே நீரின் வேகத்துக்கு, கிரேனுக்குள் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போதும், மேலே இருந்தவர்களை சப்தம் போட்டு அழைத்து நீளமான துணி கேட்டார். அவர்கள் அதை வாங்கி வீசம் அதை அந்த பெண் உடலின் மேல் பகுதியில் கஷ்டப்பட்டு சுற்றி உடலை மேலே அனுப்பி வைத்தார்.

பொள்ளாச்சி வீடீயோக்கள் தமிழகத்தையே பதற வைத்து, பொள்ளாச்சிக்கும் தலைகுனிவை தந்துள்ள நிலையில் அதே பொள்ளாச்சியில் பெண்மைக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!