புதிதாக செல்போன் வாங்கியதால் நிகழ்ந்த விபரீதம் – மனைவியை அடித்து கொன்ற விவசாயி..!


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 38) விவசாயி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (37). முத்துலட்சுமிக்கும், சூலக்கல்லை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அருந்ததி (11) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முத்துலட்சுமி, காளிமுத்துவை பிரிந்து சென்று, பாலமுருகனை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வேலாயுதம்பாளையத்தில் வசித்து வந்தார். பாலமுருகனுக்கும், முத்துலட்சுமிக்கும், சத்யஸ்ரீ (3), சஜிதா (8 மாதம்) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவருக்கு பிறந்த மகள் அருந்ததியையும் முத்துலட்சுமி தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு முத்துலட்சுமி தனது ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு பாலமுருகன் குடிபோதையில் வந்துள்ளார். அவர், தான் பொள்ளாச்சிக்கு சென்று ரூ.9 ஆயிரத்துக்கு புதிதாக செல்போனை வாங்கி வந்திருப்பதாக முத்துலட்சுமியிடம் தெரிவித்தார்.


இதனால் ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமி, பணம் இல்லாமல் கஷ்டப்படும்போது, ரூ.9 ஆயிரத்துக்கு செல்போன் எதற்கு? என்று கேட்டு கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அங்கு கிடந்த களைபறிக்கும் களைக்கொத்தியால் முத்துலட்சுமியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமி ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராஜன், சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பாலமுருகன் கிணத்துக்கடவு போலீசில் சரண் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மனைவியை விவசாயி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!