ராஜபக்சவின் பதவியை பறித்த மைத்திரி – புதிய பிரதமர் யார்..?


இலங்கை பிரதமர் பதவியை, ராஜபக்சே இன்று, ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை, கடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி, அந்த பதவியில் இருந்து நீக்கிய அதிபர் சிறிசேனா, அதற்கு பதிலாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இந்த நடவடிக்கை உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார் ரணில் விக்கிரமசிங்கே. இதில் ராஜபக்சே தோல்வி அடைந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் சிறிசேனா.

இதையடுத்து ஜனவரி 5ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடரப்பட்டன. நவம்பர் 13ஆம் தேதி இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், அதிபரின் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 13ம் தேதி தனது தீர்ப்பை வழங்கியது. அதில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டும் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நான்கரை ஆண்டு காலம் பதவி காலத்தை பூர்த்தி செய்யும் முன்பாக அதை கலைப்பதற்கு அதிபருக்கு உரிமை கிடையாது என்ற அரசியல் சாசனத்தின் பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று அதிபர் மாளிகையில், சிறிசேனா, ராஜபக்சே ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்க விடமாட்டேன் என்று அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமாசெய்து அக்கடிதத்தை அதிபர் சிறிசேனாவிற்கு அனுப்பியுள்ளார்.

இன்னும் 2 நாட்களில், புதிய பிரதமர் யார் என்பதை அதிபர் சிறிசேனா அறிவிக்க உள்ளதாக எதிர்பார்ப்பு உள்ளதால் இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!