மு.க.அழகிரி ஆதரவாளர் கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை..!


மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 45). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இன்று அதிகாலை எழுந்த மதுரைவீரன் வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு வந்தார். அங்கு டீ குடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப தயாரானார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிமணி (32), சின்னச்சாமி உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் மதுரைவீரனை சுற்றிவளைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாலமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மதுரைவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுரைவீரன் கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான மதுரைவீரன் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!