தண்ணீரில் விளக்கேற்றிய சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்..!


சாய்பாபாவின் அருளாற்றலை அறிந்து மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் சீரடிக்கு வந்தனர். இதனால் பாபா எப்போதும் பக்தர்களால் சூழப்பட்டிருந்தார்.

மதிய உணவுக்குப் பிறகு சற்று ஓய்வு எடுக்கும் சாய்பாபா மாலை நேரத்தில் லெண்டித் தோட்டத்தில் உலாவுவார். சில நாட்கள் அவர் சீரடி அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்தே சென்று வருவார்.

சீரடியின் தெற்கு பகுதியில் ராஹ்தா எனும் கிராமம் உள்ளது. வடக்குப் பகுதியில் நிம்கான் எனும் கிராமம் உள்ளது. நிம்கான் கிராமத்துக்கு பாபா அடிக்கடி சென்றதால் அவருக்கு அந்த ஊரைச் சேர்ந்த திரியம்பகடேங்க்லே என்பவர் அறிமுகம் கிடைத்தது. எனவே திரியம்பக வீட்டுக்கு பாபா அடிக்கடி செல்வார்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பாபா சாகேப் என்பவரும் வந்து சாய்பாபாவிடம் பேசிக் கொண்டிருப்பார். சாய்பாபாவின் அருள் உரைகளைக் கேட்ட பிறகு அவரது பக்தராகவே பாபா சாகேப் மாறி விட்டார். பாபா சாகேப்புக்கு நானா சாகேப் என்று ஒரு தம்பி இருந்தார். நானா சாகேப்புக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் நானா சாகேப் மிகவும் கவலையுடன் இருந்தார்.

வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் “குழந்தை பாக்கியம்” கிடைக்கும் என்று அவர் நம்பினார். எனவே இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் அதன் பிறகும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. தேவையான அளவுக்கு செல்வம் இருந்தும் கொஞ்சி மகிழ குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நானாவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் ஒரு நாள் சாய்பாபா நிம்கான் கிராமத்துக்கு வந்து திரியம்பக டேங்க்லே, பாபா சாகேப் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது பாபா சாகேப் தன் தம்பி நானாவுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என்ற வருத்தத்தை தெரிவித்தார். உடனே பாபா அவரிடம், “நானாவை சீரடிக்கு வந்து என்னைப் பார்க்க சொல்” என்றார். இந்த தகவலை பாபா சாகேப் அன்றே தன் தம்பி நானாவிடம் தெரிவித்தார். அதை கேட்டதும் நானா சாகேப்புக்கு மனதில் நம்பிக்கை பிறந்தது.

“பாபாவிடம் ஆசி பெற்றால் எல்லாம் மகிழ்ச்சியாக முடியும்“ என்ற நினைப்புடன் நானா சீரடிக்கு வந்தார். சாய்பாபாவை வழிபட்டு பணிவோடு நின்றார். அவரிடம் சாய்பாபா, “நம் இருவருக்கும் 4 பிறவிகளாகத் தொடர்பு இருக்கிறது. இந்தப் பிறவியில் உன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததால் வரச் சொன்னேன்” என்றார்.

பிறகு “இன்னும் 10 மாதங்களில் உனக்கு வாரிசு கிடைக்கும். போய் வா…” என்று கூறி உதி கொடுத்து அனுப்பினார். சாய்பாபா சொன்னபடி அடுத்த 10-வது மாதம் நானா சாகேப்பின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சீரடியில் மிகவும் வெளிப்படையாக சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களில் இந்த அற்புதம் தான் முதல் அற்புதமாகக் கருதப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைத்ததால் நானா சாகேப் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறிய அவர் பாபாவின் அற்புதத்தை அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் பரவச் செய்தார்.

சாய்பாபா பால பாபாவாக சீரடிக்கு வந்திருந்த போது கண்பட் என்பவரை தொழுநோயில் இருந்து மீட்ட அற்புதத்தை நிகழ்த்தி இருந்தார். என்றாலும் நானா சாகேப்புக்கு அவர் அருளால் குழந்தை பிறந்த சம்பவம்தான் பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சீரடியில் மற்றொரு அற்புதத்தையும் சாய்பாபா நடத்தினார். தண்ணீரில் விளக்கு எரிந்ததே அந்த அற்புதமாகும். சாய்பாபாவுக்கு இரவில் விளக்கு ஏற்றுவதில் தனியாத ஆர்வம் உண்டு. இரவு முழுவதும் தான் ஏற்றும் விளக்குகள் சுடர் விட்டு எரிய வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார்.


எந்த மதத்தையும் பின்பற்ற சொல்லாத அவர், தினமும் ஆலயங்களிலும், வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தன் பக்தர்களிடம் சொல்வார். விளக்கு ஏற்றும் பழக்கத்தை ஒருநாள் கூட அவர் மறந்ததே இல்லை. துவாரகமாயி மசூதி, சாவடி, லெண்டித் தோட்டம் உள்பட சீரடியில் 5 இடங்களில் பாபா தினமும் விளக்கு ஏற்றுவார். அந்த விளக்குகள் விடிய, விடிய எரிய வேண்டும் என்பதற்காக அப்துல் என்பவரை பொறுப்பாளராக நியமனம் செய்திருந்தார்.

மசூதியில் விளக்கு ஏற்றியதும், அதன் அருகில் உட்கார்ந்து கொள்வார். சில சமயம் சுடர்விட்டு எரியும் விளக்கை அவர் உன்னிப்பாக உற்று பார்த்துக் கொண்டே இருப்பார். இதில் அவர் ஒரு தத்துவத்தை வெளிப்படுத்தினார். எந்த விளக்கும் தானே எரிவது இல்லை. ஒரு சுடரை தூண்ட மற்றொரு தீ சுடர் அவசியம் வேண்டும். அது போல எந்த ஒரு ஆத்மாவும் தாமே முயன்று முக்தி அடைந்து விட முடியாது. அதற்கு இறை அருள் பெற்ற இன்னொரு ஆத்மாவின் துணை தேவை.

– இப்படி ஆண்டவனுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துவதாக சாய்பாபா தமது செயல்பாடுகள் மூலம் பக்தர்களுக்கு காட்டினார். விளக்கு எரிப்பதற்காக சீரடியில் உள்ள வியாபாரிகளிடம் தினமும் இலவசமாக எண்ணெய் பெறுவதை சாய்பாபா வழக்கத்தில் வைத்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் சீரடியில் பிரேம்சந்த் மார்வாடி என்பவர் உள்பட 2 எண்ணெய் வியாபாரிகளும், ஒரு மளிகைக்கடை வியாபாரியும் இருந்தனர்.

பாபா ஒரு தகரக் குவளையை எடுத்துச் செல்வார். அந்த குவளை நிரம்பும் அளவுக்கு மூன்று வியாபாரிகளும் எண்ணெய் கொடுப்பார்கள். அந்த எண்ணெயை வைத்து தான் அவர் மசூதி, சாவடி உள்ளிட்ட இடங்களில் விளக்கு ஏற்றுவார். இது தினமும் நடக்கும் நிகழ்வாகும். ஒருநாள் வியாபாரிகள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து பேசினார்கள். சாய்பாபாவுக்கு இனி எண்ணெய் கொடுக்கக் கூடாது. அவர் என்ன செய்வார் பார்க்கலாம் என்று முடிவு செய்தனர்.

முக்காலமும் உணர்ந்த பாபாவுக்கு இது நன்றாகவே தெரியும். என்றாலும் வழக்கம் போல அவர் எண்ணெய் வாங்கும் தகர குவளையை எடுத்துக் கொண்டு வியாபாரிகளிடம் சென்றார். விளக்கு ஏற்ற எண்ணெய் தருமாறு வேண்டினார். மூன்று வியாபாரிகளும், சொல்லி வைத்தது போல ‘‘பாபா….. என் கடையில் இன்று ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லை’’ என்றனர். அதை கேட்டதும் பாபாவிடம் எந்த சலனமும் ஏற்படவில்லை. யாரிடமும் கோபப்படவும் இல்லை.


‘‘எல்லாம் அல்லா விட்ட வழி’’ என்று கூறியபடி சிரித்துக் கொண்டே மசூதிக்கு திரும்பி வந்து விட்டார். அவரைப் பின் தொடர்ந்து 3 வியாபாரிகளும் வந்தனர்.

‘‘பாபாவை பெரிய மகான் என்கிறார்களே…. இன்றிரவு எண்ணெய் இல்லாமல் அவர் எப்படி விளக்கு எரிப்பார் என்று பார்த்து விடலாம்’’ என்று 3 வியாபாரிகளும் கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டனர்.

அதோடு பாபா என்ன செய்கிறார் என்பதை அவர்கள் மசூதி அருகே மறைந்து நின்று பார்த்தனர்.

சாய்பாபா தகர குவளையை எடுத்தார். அதில் கொஞ்சமாக இருந்த எண்ணெய்யை எடுத்துக் குடித்தார். பிறகு அதை குவளைக்குள் உமிழ்ந்தார். பிறகு அந்த தகரக் குவளையில் தண்ணீர் எடுத்து வந்தார். வரிசையாக இருந்த விளக்குகளில் தண்ணீரை ஊற்றினார். திரிகளை சரி செய்து தீ பற்ற வைத்தார்.

என்ன ஆச்சரியம்….. எல்லா விளக்குகளும் பளீரென எரிந்தன. விடிய, விடிய அந்த விளக்குகள் அனைத்தும் தண்ணீரில் பிரகாசமாய் சுடர் விட்டு எரிந்தன. மறைந்து நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரிகள் மூன்று பேரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாபா கடவுள் அவதாரம் என்ற உண்மை அவர்களுக்கு அதன் பிறகே புரிந்தது.


பாபாவை ஏமாற்றியதால் அது பாவமாக மாறி தங்களுக்கு தீமையாக ஏதாவது நடந்து விடுமோ என்று மூன்று வியாபாரிகளும் பயந்தனர். ஓடோடி சென்று பாபா காலில் விழுந்து வணங்கி, தங்களை மன்னிக்கும்படி கதறினார்கள். அவர்களை மன்னித்த பாபா, “பிறரது துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவது மிகப்பெரிய பாவமாகும். இனி மேலும் இத்தகைய பாவத்தை செய்யாதீர்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

மறுநாள் மூன்று வியாபாரிகளும் நடந்த சம்பவத்தை மற்றவர்களிடம் சொன்னதால், பாபா தண்ணீரில் விளக்கெரித்த சம்பவம் ஊரெங்கும் பரவியது. ஊரே திரண்டு வந்து பாபாவிடம் ஆசி பெற்றது. ஆனால் அவர்களுக்கு பாபாவிடம் பஞ்ச பூதங்களும் கட்டுப்பட்டுக் கிடந்தன என்ற உண்மை போகபோகத்தான் தெரிந்தது. அது பற்றிய அற்புதங்களை அவர் அடிக்கடி வெளிப்படுத்தினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!