கருணாநிதி உடல் அடக்கத்தை டி.வி.யில் பார்த்த தி.மு.க. தொண்டர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கெடகரஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (50) விவசாயியான இவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்தார். இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அளவில்லாத பற்று கொண்டவர். கருணாநிதி மறைவு செய்தி கேட்டு கடும் மனவருத்தத்தில் இருந்தார்.
நேற்று மாலை அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த கோவிந்தராஜன் திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தார். அவருடைய குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சுங்கதேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கதாய்ப்பா (வயது 80) தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நேற்று டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சவுளுப்பட்டி கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55) கட்டிட தொழிலாளியான இவர் தி.மு.க. மீதும், அதன் தலைவர் கருணாநிதி மீதும் பற்றும் பாசமும் கொண்டு இருந்தார். தி.மு.க.வில் உறுப்பினராகவும் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!